செய்திகள்

கோவில்பட்டியில் யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை - சீராக குடிநீர் வழங்க கோரிக்கை

Published On 2018-11-20 17:31 GMT   |   Update On 2018-11-20 17:31 GMT
சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி:

எட்டயபுரம் தாலுகா சுரைக்காய்பட்டி பஞ்சாயத்து ரணசூரன்நாயக்கன்பட்டி கிராமத்துக்கு சீவலப்பேரி குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆழ்குழாய் கிணற்றில் உள்ள மின் மோட்டார் பழுதடைந்தது. பின்னர் அதனை பழுது நீக்காமல், கிடப்பில் போட்டனர். இதனால் அப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படாததால், கிராம மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் தங்களது பகுதிக்கு சீவலப்பேரி குடிநீர் வழங்க வேண்டும். பழுதடைந்த மின் மோட்டாரை உடனே பழுது நீக்கி, சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்று காலையில் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர்.

இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் வேலுச்சாமி, கிளை செயலாளர் ராமர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், தாலுகா குழு உறுப்பினர் நடராஜன், நகர செயலாளர் முருகன் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முற்றுகையிட்டவர்களிடம் யூனியன் ஆணையாளர் முருகானந்தம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், பழுதடைந்த மின் மோட்டாரை உடனே பழுது நீக்கி, சீராக குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர். 
Tags:    

Similar News