செய்திகள்

வந்தவாசி அருகே தீ விபத்தில் மூதாட்டி பலி

Published On 2018-11-19 11:42 GMT   |   Update On 2018-11-19 11:42 GMT
வந்தவாசி அருகே தீ விபத்தில் மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வந்தவாசி:

வந்தவாசி அடுத்த தேசூர் பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேமநாதன். இவரது மனைவி யசோதை (வயது 63) இவர்களுக்கு 2 மகள் 2 மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி சென்னை, புதுவையில் வசித்து வருகின்றனர்.

சேமநாதன், யசோதை இருவரும் தேசூரில் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். இன்று காலை 6 மணி அளவில் சேமநாதன் கடையில் டீ வாங்கி வருவதாக மனைவி யசோதையிடம் கூறிவிட்டு சென்றார்.

வீட்டில் யசோதை தனியாக இருந்தார். அப்போது திடீரென மின்கசிவு ஏற்பட்டு வீட்டின் மேல் பகுதியில் தீ பிடித்தது. பற்றி எரிந்த தீ மளமளவென எரிந்து குடிசை முழுவதும் பரவியது.

அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சித்த போது எதிர்பாராதவிதமாக வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து தீ முழுவதும் பரவியது. இதில் சிக்கிக்கொண்ட யசோதை சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

வந்தவாசி தீயணைப்பு நிலைய அலுவலர் திருநாவுக்கரசு தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.

மேலும் தேசூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மதியழகன், உத்தமபுத்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மூதாட்டியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News