பரமக்குடியில் வாக்கிங் செல்வோரிடம் செல்போன் பறிப்பு- பொதுமக்கள் போலீசில் புகார்
பரமக்குடி:
பரமக்குடி வைகை ஆற்று கரையோரம் உள்ள இரண்டு சர்வீஸ் சாலைகளிலும் மாலை நேரங்களில் ஏராளமான ஆண்களும் பெண்களும் நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்கள் தங்களுக்கு வரும் செல்போன் அழைப்புகளை எடுத்து பேசிக் கொண்டு செல்லும்போது மோட்டார் சைக்கிளில் வரும் மர்ம நபர்கள் அவர்களது தலையில் தாக்கி நிலை தடுமாறச் செய்து செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடுகின்றனர்.
கடந்த சில நாட்களாக செல்போன் பறிப்பு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விலை உயர்ந்த மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய செல்போன்களையும் மர்ம நபர்கள் தட்டிப் பறித்து சென்றுள்ளனர். முக்கிய நபர்களின் செல்போன்களும் பறிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செல்போனை பறி கொடுத்த முன்னாள் மாவட்ட பதிவாளர் சேகரன் உள்பட பலர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
ஆனால் இதுவரை போலீசார் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. மேலும் அசம்பாவிதம் எற்படும் முன் போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.