திருமங்கலத்தில் குழந்தை பெற்ற 18 நாளில் பெண் மர்ம மரணம்
பேரையூர்:
திருமங்கலம் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கும் ஆண்டிபட்டி நாச்சியார் புரத்தை சேர்ந்த ராஜகோபால் மகள் மீனாவிற்கும் கடந்த 2½ வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 1½ வயதில் பெண் குழந்தையும், 18 நாளில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மீனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக திருமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று மீனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் மீனாவின் தந்தை ராஜகோபால் கொடுத்த புகாரின்பேரில் மீனா தற்கொலை செய்யவில்லை. அவரை கணவரும், மாமியாரும் சேர்ந்து அடித்துக்கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடுவதாக குறிப்பிட்டு உள்ளார்.
திருமணமான நாளில் இருந்தே கூடுதல் வரதட்சணை கேட்டு மீனாவை கொடுமைப்படுத்தி வந்ததாகவும், தங்களிடம் கூட பேச அனுமதிக்கவில்லை என்றும் அதில் தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணை அடிப்படையில் மீனாவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் மணிகண்டன், அவரது தாயார் பாக்கியலட்சுமி, சகோதரி ராஜாத்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மீனாவுக்கு திருமணமாகி 2½ ஆண்டே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.