செய்திகள்

கஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்- முதலமைச்சர் அறிவிப்பு

Published On 2018-11-16 05:49 GMT   |   Update On 2018-11-16 05:49 GMT
கஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #GajaCyclone #TNCM #EdappadiPalaniswami
சேலம்:

கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக அரசு செய்துவரும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக சேலம் மாவட்டம் ஓமலூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயலால் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் தங்கி முழு நிவாரண பணிகளை மேற்கொள்ள ஆணையிட்டுள்ளேன்.  6 மாவட்டங்களில் உள்ள முகாம்களில் 81,948 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.  பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.

கஜா புயலால் சேதடைந்த பகுதிகளில் நான் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளேன். தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கஜா புயலால் அதிகளவில் பாதிப்பு ஏற்படவில்லை. கஜா புயலால் தற்போது வரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.  இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும். 


110 கி.மீ. வேகத்தில் வீசிய கஜா புயலால் நாகையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சேத விவரங்கள் குறித்து ஆய்வு செய்த பின்னர் மத்திய அரசிடம் நிதி கோரப்படும். எப்பொழுதும் சேதத்திற்கான முழுமையான நிதியை  மத்திய அரசு கொடுத்ததில்லை.

இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #TNCM #EdappadiPalaniswami
Tags:    

Similar News