செய்திகள்
அரியலூரில் அரசு அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை
அரியலூரில் அரசு அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை போனது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரியலூர்:
அரியலூர் பூக்கார தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 50). இவரது மனைவி ஷோபனா. பன்னீர் செல்வம் சேலத்தில் பொது பணித்துறையில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பன்னீர் செல்வம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் விழுப்புரத்தில் நடக்கும் உறவினர் திருமணத்தில் கலந்து கொள்ள சென்று விட்டார். வீடு பூட்டி கிடைப்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 14 பவுன் நகை, ரூ. 1000 ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
தகவல் அறிந்ததும் அரியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்துஇன்ஸ்பெக்டர் அழகேசன், சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.4 லட்சமாகும்.