பெட்ரோல் பங்கை தகர்த்து விடுவேன் - வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் 4-வது முறையாக கைது
கோவை:
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள செந்தமிழ் நகரை சேர்ந்தவர் பீர் முகமது (வயது 36).
இவர் உக்கடம் அருகே பாலக்காடு சாலையில் உள்ள பெட்ரோல் பங்குக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவர் குடிபோதையில் இருந்துள்ளார். பெட்ரோல் நிரப்பியதும் ஊழியர் பணம் கேட்ட போது பீர் முகமது தகாத வார்த்தைகளால் திட்டினார். பங்க் ஊழியர்கள் அவரை கண்டித்தனர்.
இதனால் ஆவேசமடைந்த பீர்முகமது நான் யார் தெரியுமா? நான் நினைத்தால் வெடிகுண்டு வைத்து இந்த பங்கை தகர்த்து விடுவேன் என மிரட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
இதுகுறித்து ஊழியர்கள் பங்க் உரிமையாளர் முருகேசனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உக்கடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பீர் முகமதுவை கைது செய்தனர்.
கைதான பீர் முகமது மீது ஏற்கனவே இதுபோல 3 வழக்குகள் உள்ளன. கடந்த ஜூன் மாதம் குடிபோதையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து குனியமுத்தூரில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டியதாக கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த பின்னர் ஜூலை மாதம் மீண்டும் ஒரு முறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கைதானார்.
ஏற்கனவே கடந்த ஆண்டும் இதுபோல வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக இவர் மீது வழக்கு உள்ளது. தற்போது 4-வது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.