செய்திகள்
கார் மீது லாரி மோதல்- கோவை நகை கடை அதிபர் பலி
கோவையில் நகை கடை அதிபர் விபத்தில் பலியானார். அவரது மனைவி படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை:
கோவை ராஜவீதியை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 47). இவர் கோவை, நாகர்கோவிலில் சுரபி கோல்டு என்ற பெயரில் தங்க நகைகடை நடத்தி வருகிறார்.
மேலும் நகைகளை மொத்தமாக வாங்கி பல்வேறு கடைகளுக்கு சப்ளையும் செய்து வந்தார்.
தீபாவளியை கொண்டாட நாகர்கோவிலில் இருந்து புகழேந்தி கடந்த வாரம் கோவை வந்தார். நேற்று அவர் தனது மனைவி ஷீலாவுடன் போத்தனூர்- செட்டிப்பாளையம் ரோட்டில் காரில் சென்றார். அப்போது அந்த வழியாக திருப்பூரில் வந்த லாரி கார் மீது மோதி விபத்தானது.
இதில் சம்பவ இடத்திலேயே புகழேந்தி உடல்நசுங்கி பலியானார். அவரது மனைவி ஷீலா படுகாயத்துடன் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து செட்டிப்பாளையம் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.