செய்திகள்

செங்கல்பட்டு அருகே லாரி மீது அரசு பஸ் மோதல் - கண்டக்டர் பலி

Published On 2018-11-09 06:16 GMT   |   Update On 2018-11-09 06:16 GMT
செங்கல்பட்டு அருகே விபத்தில் கண்டக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு:

திருச்சியில் இருந்து சென்னை நோக்கி நேற்று இரவு அரசு விரைவு பஸ் புறப்பட்டது. டிரைவர் கஜேந்திரன் பஸ்சை ஓட்டினார்.

காஞ்சீபுரத்தை அடுத்த அரையம்பாக்கத்தை சேர்ந்த சுதாகர் (வயது 38) கண்டக்டராக இருந்தார். சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சில் பயணம் செய்தனர்.

இன்று அதிகாலை 3 மணியளவில் அரசு பஸ் செங்கல்பட்டு அருகே உள்ள ராஜாகுளிபேட்டை பகுதியில் வந்து கொண்டு இருந்தது.

அப்போது முன்னாள் சென்ற டேங்கர் லாரி மீது திடீரென பஸ் மோதியது. இதில் பஸ்சின் முன்பக்க சீட்டில் இருந்த கண்டக்டர் சுதாகர் படுகாயம் அடைந்தார்.

அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே சுதாகர் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்தில் பஸ்சில் இருந்த மேலும் 6 பயணிகளுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காஞ்சீபுரம் புத்தேரி தெருவை சேர்ந்த கங்காதரன், மகேஷ்வரன், முருகவேல், உமா, நிர்மலா தேவி ஆகியோர் ஒரு காரில் திருச்செந்தூர் சென்றனர்.

நேற்று அங்கிருந்து 5 பேரும் அதே காரில் காஞ்சீபுரம் திரும்பினார்கள் முருகவேல் காரை ஓட்டினார். இன்று காலை 7 மணியளவில் காஞ்சீபுரம்- வந்தவாசி சாலையில் வந்து கொண்டிருந்தது. மானாம்பதி கூட்டு சாலையில் வந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன் பகுதி லாரியின் கீழே சிக்கிக் கொண்டது.

இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது. காரில் வந்த முருகவேல், கங்காதரன், மகேஷ்வரன், உமா, நிர்மலாதேவி ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து பெருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News