செய்திகள்

தென் தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை- இந்திய வானிலை மையம்

Published On 2018-11-07 09:32 GMT   |   Update On 2018-11-07 09:32 GMT
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களிலும் தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #IMD
சென்னை:

வடகிழக்கு பருவமழை கடந்த 1-ந்தேதி தமிழகத்தில் தொடங்கி பரவலாக பெய்தது. தீபாவளிக்கு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2 நாட்களாக மழை இல்லை.

இந்த நிலையில் நேற்று இலங்கையையொட்டியுள்ள தென் மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இந்தியப் பெருங்கடல் மற்றும் குமரி கடல் பகுதிவரை பரவி இருந்தது.

அது இன்று வலு இழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி மேற்கு திசையில் கன்னியாகுமரி நோக்கி நகர்கிறது. அடுத்த 48 மணி நேரத்தில் கன்னியாகுமரியை கடந்து செல்லும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தென் தமிழக கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமான மழை ஒரு சில இடங்களில் பெய்யக்கூடும். உள் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும்.


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களிலும் தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு கன மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் உள் மாவட்டங்களில் மழை இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமேசுவரம், ராமநாதபுரம், பாம்பன், இரணியல், திருச்செந்தூர், தூத்துக்குடி, குளச்சல், ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

இதேபோல் அந்தமான் கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் (9-ந்தேதி) புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. #IMD #HeavyRain
Tags:    

Similar News