செய்திகள்
புதுமாப்பிள்ளை சின்னராஜா பிணமாக கிடக்கும் காட்சி - சின்னராஜா

கயத்தாறு, தூத்துக்குடியில் விபத்து - தீபாவளி கொண்டாடிய புதுமாப்பிள்ளை, தொழிலாளி பலி

Published On 2018-11-07 03:56 GMT   |   Update On 2018-11-07 03:56 GMT
கயத்தாறு, தூத்துக்குடியில் நடந்த விபத்தில் புதுமாப்பிள்ளை மற்றும் உப்பள தொழிலாளி பலியாகினர். #Accident
கயத்தாறு:

கயத்தாறு அருகே உள்ள பருத்திகுளம் மேலத்தெருவை சேர்ந்த பூல்பாண்டி என்பவரது மகன் சின்னராஜா (வயது 28). கயத்தாறில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சீதாலட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி 2 மாதம் தான் ஆகிறது. புதுமண தம்பதியான இவர்கள் நேற்று தலைதீபாவளி கொண்டாட கயத்தாறு அருகே சவலாப்பேரியில் உள்ள சீதாலட்சுமியின் உறவினர் வீட்டுக்கு சென்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை சின்னராஜா மட்டும் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் பருத்தி குளத்துக்கு சென்றார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த தடுப்புச் சுவரில் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே சின்னராஜா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சின்னராஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து பற்றி போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலை தீபாவளி கொண்டாடிய புதுமாப்பிள்ளை திருமணமான 2 மாதத்திலேயே பலியான சம்பவம் அவர்களது குடும்பத்தினரிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்றொரு சம்பவம்...

தூத்துக்குடி அருகே உள்ள வேப்பலோடையை சேர்ந்தவர் ராமர்பாண்டி மகன் ராஜா (35). குளத்தூரை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் ராஜா (27). இவர்கள் இருவரும் வேப்பலோடை பகுதியில் உள்ள உப்பளத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர்.

நேற்று தீபாவளி பண்டிகை விடுமுறை என்பதால் இருவரும் வேலைக்கு செல்லவில்லை. மதியம் விஜய் நடித்து நேற்று வெளியான ‘சர்கார்’ படம் பார்க்க தூத்துக்குடிக்கு சென்றனர். படம் பார்த்து விட்டு இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.

இரவு 8 மணியளவில் தருவைகுளம் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் வந்தபோது அவ்வழியாக சென்ற ஒரு லாரி அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த ராமர்பாண்டி மகன் ராஜா சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் வந்த மற்றொரு ராஜா காயத்துடன் உயிர் தப்பினார்.

அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து தருவைகுளம் போலீசார் வழக்குபதிந்து விபத்துக்கு காரணமான லாரியை தேடி வருகின்றனர்.  #Accident




Tags:    

Similar News