செய்திகள்

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் வைரஸ் காய்ச்சலுக்கு பெண் பலி

Published On 2018-11-03 15:52 IST   |   Update On 2018-11-03 15:52:00 IST
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் வைரஸ் காய்ச்சலுக்கு பெண் பலியானார். பன்றி காய்ச்சல் பாதிப்புக்காக 5 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மதுரை:

மதுரை மற்றும் சுற்றப்புற மாவட்டங்களில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் காய்ச்சலின் தாக்கம் குறையவில்லை.

சிவகங்கை மாவட்டம், அரியக்குடியைச் சேர்ந்த வெங்கடாசலம் மனைவி சித்ரா (வயது 50). இவருக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்து வந்தது. இதற்காக அவர் பல இடங்களில் மருத்துவம் பார்த்தார். காய்ச்சல் குணமாகவில்லை.

இந்த நிலையில் சித்ரா கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில் அவருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 128 பேர் வைரஸ் காய்ச்சல் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பன்றி காய்ச்சல் பாதிப்புக்காக 5 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பொது காய்ச்சல் வார்டு பிரிவில் உள்நோயாளியாக இருப்பவர்கள் பரிசோதனை முடிவுக்காக காத்து இருக்கிறார்கள்.

Tags:    

Similar News