செய்திகள்

பள்ளியில் மாணவி தற்கொலை முயற்சி- உதவி தலைமை ஆசிரியை மீது 2 பிரிவுகளில் வழக்கு

Published On 2018-10-30 09:57 GMT   |   Update On 2018-10-30 09:57 GMT
நாகர்கோவில் அருகே பள்ளியில் மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் குறித்து பள்ளி உதவி தலைமை ஆசிரியை மீது போலீசார் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் அருகே உள்ள புத்தேரி பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் வடசேரி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

அந்த மாணவியை பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை தகாத வார்த்தையால் பேசியதுடன் கையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அந்த மாணவி, பள்ளியின் முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதில் மாணவியின் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள், மாணவியை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மாணவி தற்கொலைக்கு முயன்றது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு விரைந்து வந்தனர். மாணவி தற்கொலை முயற்சிக்கு காரணமான ஆசிரியை கைது செய்யக்கோரி, பள்ளி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும், டி.எஸ்.பி. இளங்கோவன், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்று போலீசார் உறுதி அளித்தனர்.

இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து மாணவியின் தந்தை வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில், உதவி தலைமை ஆசிரியை மீது இந்திய தண்டனைச் சட்டம் 294(பி), 323 ஐ.பி.சி. ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தற்கொலைக்கு முயன்ற மாணவியை மேல் சிகிச்சைக்காக மற்றொரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #tamilnews
Tags:    

Similar News