செய்திகள்

அரியலூர் அருகே சிமெண்ட் ஆலை லாரி மோதி டிரைவர் பலி

Published On 2018-10-29 14:13 GMT   |   Update On 2018-10-29 14:13 GMT
அரியலூர் அருகே சிமெண்ட் ஆலை லாரி மோதியதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
ஆர்.எஸ்.மாத்தூர்:

அரியலூர் அருகே உள்ள சீனிவாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் எழிலரசன். இவர் தனியார் சிமெண்ட் ஆலையில் டிரைவராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று அரியலூர் புறவழிச்சாலை செந்துறை ரவுண்டானா சந்திப்பு பகுதியில் செல்லும் போது அந்த வழியாக வந்த சிமெண்ட் ஆலை லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் திடீரென அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சிமெண்ட் ஆலை லாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி, எழிலரசன் பிணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பொதுமக்கள் மறியலை கைவிடவில்லை. இதையடுத்து லேசான தடியடி நடத்தினர். ஆனாலும் பொதுமக்கள் அங்கிருந்து கலையாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியதையடுத்து அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டனர். தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனமும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர் எழிலரசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News