செய்திகள்

இரணியல் அருகே என்ஜினீயரிங் மாணவியை காதலிக்க சொல்லி மிரட்டல்- 2 வாலிபர்கள் கைது

Published On 2018-10-26 13:47 GMT   |   Update On 2018-10-26 13:47 GMT
என்ஜினீயரிங் மாணவியை காதலிக்க சொல்லி மிரட்டல் விடுத்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இரணியல்:

இரணியல் அருகே உள்ள கட்டிமாங்கோட்டைச் சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. இவர் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் தினமும் வீட்டில் இருந்து கல்லூரி பஸ்சில் சென்று வந்தார். நேற்று மாலை கல்லூரி பஸ்சில் வந்த மாணவி, ஆசாரிவிளை நிறுத்தத்தில் இறங்கினார்.

அங்கிருந்து அவர் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காட்டுவிளையைச் சேர்ந்த ஜார்ஜ் (வயது 19), அவரது நண்பர்கள் விஜயன் (26), விஜூகுமார் (22) ஆகிய 3 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

அவர்களில் ஜார்ஜ் தன்னை காதலிக்கும்படி மாணவியிடம் வற்புறுத்தினார். அதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் ஆத்திரம் அடைந்த ஜார்ஜ், என்னை காதலிக்காவிட்டால் உன்னை கடத்திச் சென்று விடுவேன் என எச்சரித்தார். அவருடன் வந்திருந்த 2 நண்பர்களும், ஜார்ஜை காதலிக்கும்படி மிரட்டினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்தார். பின்னர் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகாராகவும் கொடுத்தார்.

அதில் காட்டுவிளையைச் சேர்ந்த 3 வாலிபர்கள் தன்னை காதலிக்கச் சொல்லி மிரட்டுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் ஜார்ஜ், விஜயன், விஜூகுமார் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் விஜயன், விஜூகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஜார்ஜை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News