செய்திகள்

சிதம்பரம் அருகே பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை

Published On 2018-10-17 17:01 GMT   |   Update On 2018-10-17 17:01 GMT
சிதம்பரம் அருகே விஷம் குடித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம்:

சிதம்பரம் அருகே உள்ள கீழ்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன். இவருடைய மகள் காவியா (வயது 16). இவர், சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காவியா மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். வீட்டில் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தார்.

கடந்த 14-ந் தேதி கடைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றவர், வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், காவியாவை தேடினர். இதனிடையே அதே ஊரில் உள்ள பாவாடைராயர் கோவில் அருகே காவியா, மயங்கி கிடப்பதாகவும், அவரது வாயில் இருந்து நுரைவெளியேறுவதாகவும் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் அவரது பெற்றோரிடம் கூறினர்.

உடனே பதறியடித்துக்கொண்டு அவர்கள், அங்கு சென்று பார்த்தனர். அப்போது காவியா, விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடப்பதும், உயிருக்கு போராடியதும் தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அவர், சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி காவியா நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து காவியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News