செய்திகள்

திருப்பத்தூர் அருகே வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

Published On 2018-10-17 16:34 GMT   |   Update On 2018-10-17 16:34 GMT
திருப்பத்தூர் அருகே பூட்டியிருந்த வீடுகளின் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அருகே கூத்தகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் வண்ணியன் மனைவி செல்வி (வயது 52). இவர் வீட்டை பூட்டிவிட்டு மானகிரியில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் மறுநாள் வீட்டின் கதவு திறந்து கிடப்பதை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்து செல்விக்கு தகவல் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 4½ பவுன் நகை மற்றும் 1,500 ரூபாய் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. மேலும் பொருட்கள் வீடு முழுவதும் சிதறி கிடந்தன. அதில் முக்கியமான சில பொருட்கள் திருடு போனதாக கூறப்படுகிறது.

இதே போல அதே ஊரைச்சேர்ந்த மூர்த்தி என்பவருடைய மனைவி வள்ளி (75) வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். இதைநோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே பீரோவில் இருந்த 2½ பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம், ஒரு பட்டுச்சேலையை திருடிச்சென்றுள்ளனர். மேலும் அருகிலுள்ள ராஜகோபால் மனைவி வசந்தா (60) என்பவரது வீட்டிலும் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் நகை, பணம் இல்லை என்பதால் தப்பிச் சென்றுவிட்டனராம்.

இதுகுறித்து செல்வி மற்றும் வள்ளி ஆகியோர் நாச்சியாபுரம் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர்முனியப்பன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். ஒரே ஊரில் மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
Tags:    

Similar News