நங்கநல்லூர் ஏ.டி.எம் மையத்தில் கொள்ளை முயற்சி - வாலிபர் கைது
ஆலந்தூர்:
நங்கநல்லூர் எம்.ஜி.ஆர் சாலையில் கரூர் வைசியா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது.
கடந்த 15-ந்தேதி இங்கு கொள்ளை முயற்சி நடந்ததாக நங்கநல்லூர் கரூர் வைசியா வங்கி உதவி மேலாளர் ஞானபிரபு போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து நங்கநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானவற்றை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் ஏ.டி.எம். எந்திரத்தை திறந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது.
தீவிர விசாரணையின் போது கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது நங்க நல்லூர் பி.வி.நகரை சேர்ந்த செல்வமணி (24) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் சம்பவம் நடந்த அன்று செல்வமணி, தனது மனைவியை அதிகாலையில் பஸ் ஏற்றிவிட வந்ததும், வீடு திரும்பும் வழியில், ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்து எந்திரத்தை திறக்க முயன்றார். அப்போது மும்பையில் உள்ள வங்கியின் தலைமை கிளையில் எச்சரிக்கை மணி ஒலித்தது.
இதையடுத்து நங்கநல்லூர் வங்கி கிளைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கொடுக்கப்பட்ட புகாரின்படி வாலிபர் செல்வமணி கைது செய்யப்பட்டார்.