செய்திகள்

திட்டக்குடி அருகே குழந்தையை கொன்று கணவன் - மனைவி தற்கொலை

Published On 2018-10-15 23:19 GMT   |   Update On 2018-10-15 23:19 GMT
திட்டக்குடி அருகே பெண் குழந்தையை கொன்று கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.
திட்டக்குடி:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 29). இவருடைய மனைவி உஷா (25). இவர்கள் 2 பேரும் காதலித்து 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் பிரதிஷா என்ற பெண் குழந்தை இருந்தது.

பிரகாஷ் குடும்பத்தோடு குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தங்கி இருந்து அதே பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வந்தார். சில நாட்களுக்கு முன்பு பிரகாஷ் தனது மனைவி, மகளுடன் சொந்த ஊரான இடைச்செருவாய்க்கு வந்தார்.

இந்நிலையில் பிரகாசின் வீடு நேற்று காலையில் நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்தனர். அப்போது பிரகாஷ், உஷா ஆகியோர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது அவர்கள் இருவரது கை மணிக்கட்டு நரம்புகளும் அறுக்கப்பட்டு ரத்தம் வடிந்த நிலையில் கிடந்தனர். அவர்களது உடலுக்கு கீழே, குழந்தை பிரதிஷா கை மணிக்கட்டு நரம்பு அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தாள்.

இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து இறந்து கிடந்தவர்களின் உடல்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், குழந்தையை கொன்று விட்டு கணவனும், மனைவியும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதற்கான காரணம் என்ன? என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பிரகாசுக்கும், உஷாவுக்கும் நேற்று திருமண நாளாகும். தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட பிரகாசும், உஷாவும் திருமணத்தின் போது அணிந்திருந்த ஆடைகளை உடுத்தி இருந்தனர். திருமண நாளை கொண்டாட வேண்டிய நாளில், அவர்கள் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. 
Tags:    

Similar News