செய்திகள்

குன்றத்தூர் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2018-10-15 22:48 GMT   |   Update On 2018-10-15 22:48 GMT
குன்றத்தூர் அருகே, தீராத வயிற்று வலியால் கல்லூரி மாணவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பூந்தமல்லி:

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த கெலட்டிப்பேட்டை, அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பக்தன். இவருடைய மகன் பிரவீன்குமார்(வயது 20). இவர், சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று காலை நீண்டநேரம் ஆகியும் பிரவீன்குமார், தனது அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர், அறையின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு பிரவீன்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மகனின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இதுபற்றி குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார், தூக்கில் தொங்கிய பிரவீன்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பிரவீன்குமார் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதனால் விரக்தி அடைந்த அவர், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி குன்றத்தூர் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News