நன்னிலத்தில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து பணம்-நகை திருட்டு
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல்சரகத்திற்குட்பட்ட தூத்துக்குடி பகுதியை சேர்ந்தவர் கருணா மூர்த்தி (வயது 67). விவசாயி. இவர் கடந்த 10-ந்தேதி குடும்பத்துடன் புறப்பட்டு திருவையாறில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு சென்று விட்டார்.
பின்னர் நேற்று வீடு திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப் பட்டிருந்தது. மேலும் அதில் வைத்திருந்த ரூ.8 ஆயிரம் பணம் மற்றும் 5 பவுன் நகை, வீட்டில் இருந்து வெள்ளி பொருட்கள் ஆகியவை திருட்டு போய் இருந்தது.
இதைத் தொடர்ந்து கருணாமூர்த்தி நன்னிலம் போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் வீட்டில் யாரும் இல்லாததை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் கதவின் பூட்டை உடைத்து திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வீடு புகுந்து திருடி சென்ற மர்ம நபர்கள் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.