பனவடலிசத்திரம் அருகே சொத்து தகராறில் பெண் மீது தாக்குதல் தந்தை-மகன் கைது
சங்கரன்கோவில்:
பனவடலிசத்திரம் அருகே உள்ள கற்படத்தை சேர்ந்தவர் வெயிலுமுத்து மனைவி அங்கயற்கண்ணி (வயது 35). இதே ஊரை சேர்ந்த இவரின் தாய்மாமா ராஜேந்திரன் (49). ராஜேந்திரனிடம் கடந்த 20 வருடத்திற்கு முன்பு அங்கயற்கண்ணியின் தாயார் 45ஆயிரம் ரூபாய் கொடுத்து தற்போது குடியிருந்து வரும் வீட்டை வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இருவரும் உறவினர்கள் என்பதால் நம்பிக்கையின் பேரில் பத்திரம் எழுதி வாங்க வில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் அங்கயற்கண்ணியிடம், ராஜேந்திரன் வீட்டை காலி செய்ய வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதற்கு அங்கயற்கண்ணி நான் தான் வீட்டை விலைக்கு வாங்கி விட்டேனே என கூறி மறுத்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்த அங்கயற்கண்ணியை அங்கு வந்த ராஜேந்திரன் மற்றும் அவரது மகன் கற்பகபாண்டியன் (25) ஆகியோர் சேர்ந்து வீட்டை காலி செய்ய வலியுறுத்தியுள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ராஜேந்திரன் அரிவாளால் அங்கயற்கண்ணியை வெட்டி விட்டு வீட்டில் உள்ள பொருள்களை அடித்து உதைத்து சேதப்படுத்தி விட்டு சென்று விட்டார்.
இதில் காயமடைந்த அங்கயற்கண்ணி மருத்து மனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அய்யாபுரம் போலீசார் ராஜேந்திரன் மற்றும் அவரது மகன் கற்பகபாண்டியனை கைது செய்தனர்.