செய்திகள்

தமிழக பல்கலை.களில் துணைவேந்தர் பதவிக்கு ரூ.50 கோடி வரை லஞ்சம் - பேராசிரியர் தகவல்

Published On 2018-10-07 07:34 GMT   |   Update On 2018-10-07 12:40 GMT
தமிழக பல்கலைக் கழகங்களில் லஞ்சம் வாங்கிக் கொண்டு துணைவேந்தர் பதவி நிரப்பப்பட்டதாக மூத்த பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். #ViceChancellors #bribe

சென்னை:

தமிழக பல்கலைக் கழகங்களில் இதற்கு முன்பு பெருமளவு லஞ்சம் வாங்கிக் கொண்டு துணைவேந்தர் பதவி நிரப்பப்பட்டதாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.

இது, தமிழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கவர்னர் சொன்ன தகவல் முற்றிலும் உண்மை என்று பல்கலைக்கழக பேராசிரியர்களும், கல்வியாளர்களும் கூறுகிறார்கள்.

இதுபற்றி மூத்த பேராசிரியர் ஒருவர் கூறும் போது, கடந்த 15 ஆண்டுகளாகவே பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் பணம் பெற்றுதான் வழங்கப்பட்டது.

ஆரம்பத்தில் ரூ.15 லட்சம் என இதற்கு விலை இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து ரூ. 50 கோடி வரை லஞ்சம் பெற்று இந்த பதவி வழங்கப்பட்டது என்று அவர் கூறினார்.

துணைவேந்தர் பதவி காலம் 3 ஆண்டுகள் மட்டும்தான். இதற்குள் தான் லஞ்சம் கொடுத்த பணத்தை சம்பாதிப்பதுடன் மேற்கொண்டும் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் துணை வேந்தர்களுக்கு இருந்தது.

 


 

இதனால் உயர் கல்வித் துறையில் லஞ்சம் தலை விரித்தாடியது என்று சில பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

சில ஒப்பந்ததாரர்களும், பல்கலைக்கழக தனியார் இணைப்பு கல்லூரிகளும் தங்களுக்கு வேண்டிய சிலரை உருவாக்குவதற்காக அவர்களே தானாக முன் வந்து லஞ்ச பணத்தை கொடுத்ததாகவும் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

துணைவேந்தராக நியமிக்கப்படுபவருக்கு அதற்கான லஞ்ச பணத்தை திரட்டுவதற்கென்றே புரோக்கர்களும் செயல்பட்டார்கள் என்றும் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

மேலும் துணைவேந்தருக்கு பல்வேறு வகையில் வருமானம் வருவதற்கும் இந்த புரோக்கர்கள ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளனர்.

ஆனால், கடந்த 1½ ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் உண்மையான தகுதி அடிப்படையில் நியமிக்கப்படுவதாகவும் பேராசிரியர்கள் கூறினார்கள்.

பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக தனி தேடுதல் குழு மற்றும் கல்வியாளர்கள் குழு செயல்படுகிறது.

இதற்கு முன்பு அவர்கள் வெளிப்படையாக செயல்பட்டது இல்லை. ஆனால், இந்த குழு இப்போது வெளிப்படையாக செயல்பட்டு சிறந்த நபர்களை தேர்வு செய்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா தேர்வு செய்யப்பட்ட பிறகு மிகவும் நேர்மையாக பணிகள் நடப்பதாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

சமீபத்தில் மதுரை பல்கலைக்கழக துணை வேந்தர் தேர்வு செய்யப்பட்ட போது, 2 அதிகார வர்க்கங்கள் தலையிட்ட போதும் தேர்வு முறையாக நடந்ததாக மூத்த கல்வியாளர் ஒருவர் கூறினார்.

கான்பூர் ஐ.ஐ.டி. முன்னாள் சேர்மன் அனந்தகிருஷ்ணன் இது பற்றி கூறும் போது, மற்றவற்றில் நடக்கும் ஊழலை விட கல்வி நிறுவனங்களில் நடக்கும் ஊழல் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். அது ஒரு சமூகத்தையே பெரிய அளவில் பாதிக்கும். துணை வேந்தர் நியமனத்தில் மட்டும் அல்ல, அனைத்து வகைகளிலும் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறினார். #ViceChancellors #bribe

Tags:    

Similar News