செய்திகள்

ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வினர் இனிமேல் மதிக்க மாட்டார்கள் - தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி

Published On 2018-10-06 09:28 GMT   |   Update On 2018-10-06 09:28 GMT
தினகரனை ரகசியமாக சந்தித்ததால் ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வினர் இனிமேல் மதிக்க மாட்டார்கள் என்று தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #OPanneerselvam #TTVDhinakaran #ADMK #ThangaTamilSelvan

சென்னை:

டி.டி.வி. தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்ச் செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டி.டி. வி.தினகரனை பார்த்ததில் தவறு கிடையாது. ஆனால் யாரிடமும் சொல்லாமல் வந்து பார்த்ததுதான் தவறு என்கிறோம்.

ஏனென்றால் டி.டி.வி. தினகரன் எங்களோடு கலந்து பேசிய பிறகுதான் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க சென்றார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் தன்னோடு இருந்த கே.பி. முனுசாமி, மைத்ரேயன், பி.எச். பாண்டியன் ஆகியோரிடம் கூட சொல்லாமல் ரகசியமாக வந்து சந்தித்து விட்டு சென்றுள்ளார்.

அதுமட்டுமல்ல இந்த விசயத்தை இதுவரையிலும் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இது தெரியாமல் கே.பி.முனுசாமி நேற்று மதியம் வரை தினகரனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்திருக்க மாட்டார். அது கட்டுக்கதை என்று அப்பாவித்தனமாக கூறி வந்தார். அவரது முகத்திலேயே ஓ.பன்னீர்செல்வம் கரியை பூசி விட்டார்.


ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கை மத்திய அரசுக்கே அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அவரை நம்பிய மத்திய மந்திரிகளுக்கும், அ.தி.மு.க. மூத்த தலைவர்களுக்கும் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை துரோகம் செய்துள்ளார். இனிமேல் யாரும் ஓ.பன்னீர்செல்வத்தை மதிக்கமாட்டார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் சசிகலா குடும்பத்தோடு தர்மயுத்தம் நடத்துவதாக வெளியில் பேசிக் கொண்டு உள்ளுக்குள் ரகசியமாக வந்து சந்தித்து பேசுவதால் அவரது இரட்டை வேடத்தை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே டி.டி.வி.தினகரன் இந்த விசயத்தை வெளிப்படுத்தினார்.

இவ்வாறு அவர் கூறினார். #OPanneerselvam #TTVDhinakaran #ADMK #ThangaTamilSelvan

Tags:    

Similar News