செய்திகள்

துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு - ஆளுநரின் புகாருக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் பதில்

Published On 2018-10-06 08:40 GMT   |   Update On 2018-10-06 08:48 GMT
துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியதற்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் பதில் அளித்துள்ளார். #BanwarilalPurohit #ViceChancellors #MinisterKPAnbalagan
சென்னை:

தமிழகத்தில் துணைவேந்தர் நியமனத்தில் பல கோடி அளவிற்கு பணம் புரண்டதாகவும் இதனால் தான் மிகுந்த மனவருத்தம் அடைந்ததாகவும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார். ஏற்கனவே இது தொடர்பாக பல்வேறு தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வரும் நிலையில், ஆளுநரின் கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், தருமபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம், ஆளுநரின் இந்த குற்றச்சாட்டு குறித்து நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்து அமைச்சர் அன்பழகன் கூறியதாவது:-

துணைவேந்தர்கள் நியமனத்தில் அரசுக்கும் உயர்கல்வித் துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆளுநர் பன்வாரிலால் எதை மனதில் வைத்துக்கொண்டு இவ்வாறு பேசினார் என்று தெரியவில்லை.



துணைவேந்தர்களை நியமிப்பது முழுக்க முழுக்க ஆளுநர் மட்டுமே. தேடுதல் குழுவை அமைப்பதுடன் அரசின் பணி முடிந்துவிடுகிறது. தேடுதல் குழு அமைக்கப்பட்டு அதன்மூலம் துணைவேந்தர் பதவிக்கு 3 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆளுநருக்கு ஒப்படைக்கப்படும். தேர்வு செய்யப்பட்ட 3 பேரில் ஒருவரை துணைவேந்தராக நியமிக்கிறார் ஆளுநர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பணம் கொடுத்து துணைவேந்தர்கள் பதவி பெற்றவர்கள் யார் என பெயர்களை தெரிவித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #BanwarilalPurohit #ViceChancellors #MinisterKPAnbalagan
Tags:    

Similar News