செய்திகள்

வேலை நிறுத்தம் செய்த ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2018-10-06 08:14 GMT   |   Update On 2018-10-06 08:14 GMT
கடந்த 4-ந்தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #ADMK #TNMinister #Sengottaiyan
கோபி:

கோபி அருகேயுள்ள லக்கம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட ல.கள்ளிப்பட்டி, நல்லகவுண்டம்பாளையம், தொட்டிபாளையம், கரட்டடிபாளையம், வெள்ளாங்காட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி செலவில் புதிய தார் சாலைகள் அமைக்கப்பட உள்ளன.

இதற்கான பணியை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வருகிற நவம்பர் மாதத்திற்குள் 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கு 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் கொண்டு வரப்படும்.

கோப்புப்படம்

மத்திய அரசின் உதவியோடு அடல் டிங்கர் லேப் எனப்படும் அறிவியல் ஆய்வகங்கள் பள்ளிகளில் அமைக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

சீருடைகள் மாற்றத்தில் மாணவர்களின் அளவுகளுக்கு ஏற்ப அந்தந்த ஊர்களில் சமூக நலத்துறையின் மூலமாக பள்ளிகளுக்குச் சென்று மாணவ, மாணவிகளுக்கு அளவெடுத்து தைப்பதற்கு அரசு பரிசீலனை செய்து வருகிறது.

கடந்த 4-ந்தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ளும் வகையில் பள்ளி கட்டிங்களை ஆய்வு செய்ய கல்வி அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மழை வரும் பொழுது மாணவர்கள் பாதிக்காத வகையில் அவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்.

நம்பியூர் பகுதியில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். வரும் பருவமழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Sengottaiyan
Tags:    

Similar News