செய்திகள்

மாமல்லபுரம் அருகே வாலிபர் கொலை

Published On 2018-10-05 11:43 IST   |   Update On 2018-10-05 11:43:00 IST
மாமல்லபுரம் அருகே காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Murder

மாமல்லபுரம்:

நெய்வேலி தைரியத்தை சேர்ந்த பழனிவேல் மகன் அருண் பிரகாஷ் (வயது 24). இவர் ஓரகடத்தில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவளம் அடுத்த திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையோரம் கழுத்தில் பீர் பாட்டிலால் குத்தப்பட்டு முகத்தை கல்லால் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

மாமல்லபுரம் போலீசார் பிணத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதணைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கொலை பற்றி துப்பு துலக்க மாமல்லபுரம் டி.எஸ்.பி சுப்புராஜ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், எஸ்.ஜ. முத்துக் குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் ஒரே பெண்ணை இருவர் காதலித்து வந்ததால் வாக்கு வாதம் ஏற்பட்ட உரையாடல் கண்டுபிடிக்கபட்டது.

அந்த நபர் காதலித்து வந்த பெண் யார்? என தனிப்படை விசாரணை நடந்து வருகிறது. கொலை நடந்த இடத்தில் பைக் ஒன்று கிடந்தது. போலீசார் கைப்பற்றி விசாரித்த போது அது திருட்டு பைக் என தெரிந்தது.

பைக்கில் வந்தவர்கள் கூலிப் படையாக இருக்கலாம் என்று தெரிகிறது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். #Murder

Tags:    

Similar News