செய்திகள்

வத்திராயிருப்பு அருகே பெண் வெட்டிக்கொலை- கள்ளக்காதல் வைத்ததால் கணவர் ஆத்திரம்

Published On 2018-10-01 17:15 IST   |   Update On 2018-10-01 17:15:00 IST
வத்திராயிருப்பு அருகே நடத்தை சரியில்லாததால் மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு போலீஸ் சரகத்திற்குட்பட்ட சேதுநாராயணபுரம் இறவைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 29) முறுக்கு வியாபாரி.

இவருக்கும், கவுசல்யா (18) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கவினேஷ் (1) என்ற மகன் உள்ளான்.

இந்த நிலையில் வேம்பூரைச் சேர்ந்த குருபுத்ரன் (45) என்பவருடன் கவுசல்யாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இது தெரிய வந்ததும் கருப்பையா மனைவியை கண்டித்தார். இது பிடிக்காததால் கவுசல்யா, தனது தாயார் மாரீசுவரியுடன் அதே பகுதியில் உள்ள தாத்தா தங்கமுனி வீட்டுக்குச் சென்றார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு கருப்பையா அங்கு சென்றார். அவர் கவுசல்யாவுடன் வாக்குவாதம் செய்தார்.

அப்போது ஆத்திரம் அடைந்த கருப்பையா, மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவுசல்யாவை வெட்டினார். இதனை தங்கமுனி தடுத்த போது அவருக்கும் வெட்டு விழுந்தது.

பலத்த காயம் அடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கவுசல்யா இறந்து விட்டார்.

வத்திராயிருப்பு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கருப்பையாவை கைது செய்தனர்.

அதிகாலையில் மனைவியை, கணவரே வெட்டிக்கொலை செய்த சம்பவம் அந்தப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News