செய்திகள்

அண்ணா அறிவாலயத்தில் முகஸ்டாலின் 1-ந்தேதி நிர்வாகிகளை சந்திக்கிறார்

Published On 2018-09-29 04:57 GMT   |   Update On 2018-09-29 04:57 GMT
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் நாளை மறுநாள் அண்ணா அறிவாலயம் வருகிறார். அப்போது கட்சியின் மூத்த நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #DMK #MKStalin
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 26-ந்தேதி இரவு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு வலது கால் தொடை பகுதியில் நீர் கட்டி இருந்ததை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றினார்கள்.

சிகிச்சைக்கு பிறகு மறுநாள் (27-ந்தேதி) மதியம் 1.40 மணிக்கு ஆஸ்பத்திரியில் இருந்து மு.க.ஸ்டாலின் வீடு திரும்பினார்.

சிறிய அறுவை சிகிச்சை என்றாலும் அவரை சில நாட்கள் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுரை வழங்கினார்கள். அதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் மு.க.ஸ்டாலின் ஓய்வு எடுத்து வருகிறார்.

அவருக்கு தொந்தரவு கொடுக்க கூடாது என்பதற்காக கட்சி நிர்வாகிகள் அவரை வீட்டுக்கு சென்று பார்க்கவில்லை. போனில் உதவியாளரிடம் பேசி நலம் விசாரித்துக்கொண்டனர்.

மு.க.ஸ்டாலின் வீட்டில் இருந்தாலும் அரசியல் நிலவரங்களை அறிந்து அதற்கேற்ப நிர்வாகிகளுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.


தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் நாளை மறுநாள் (1-ந்தேதி) அண்ணா அறிவாலயம் வருகிறார்.

கட்சியின் மூத்த நிர்வாகிகளை வரவழைத்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #DMK #MKStalin
Tags:    

Similar News