செய்திகள்

தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டரை தாக்க முயன்ற முதியவர் கைது

Published On 2018-09-28 15:08 GMT   |   Update On 2018-09-28 15:08 GMT
இல்லாத மாத்திரையை எதற்கு எழுதி கொடுத்தீர்கள் என்று டாக்டரை தாக்க முயன்ற முதியவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உம்பாரக்காரப்பட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 70). விவசாயி. இவருக்கு கடந்த சில நாட்களாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டார்.

இதற்காக இவர் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக நேற்று வந்தார். அப்போது புறநோயாளிகள் சிகிச்சை அறையில் டாக்டரை சந்திப்பதற்காக வரிசையில் நின்றார். திடீரென்று அவருக்கு வயிற்று வலி அதிகமாகவே நேராக டாக்டரை சந்தித்து முதலில் தனக்கு சிகிச்சை அளிக்குமாறு கேட்டார். 

உடனே அவருக்கு டாக்டர் மருந்து சீட்டில் மருந்து எழுதி கொடுத்து இதனை சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று கூறி அனுப்பி வைத்தார். உடனே கோவிந்தன் மருந்தகம் அறைக்கு சென்று சீட்டை காண்பித்து மாத்திரை கேட்டார். அப்போது டாக்டர் எழுதி கொடுத்த மாத்திரை இல்லை என்று அங்கு இருந்தவர்கள் தெரிவித்தனர். 

உடனே அவர் டாக்டரிடம் சென்று இல்லாத மாத்திரையை எதற்கு எழுதி கொடுத்தீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரத்தில் டாக்டரை கோவிந்தன் அடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து டாக்டர் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கோவிந்தனை கைது செய்தனர். இந்த சம்பவம் அரசு ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News