செய்திகள்
எடப்பாடி பகுதியில் இடி-மின்னலுடன் கனமழை
எடப்பாடி பகுதியில் நேற்று இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. பல ஏக்கர் கரும்பு பயிர்கள் சரிந்து நாசமானதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மேட்டூர், சேலம் கோரி மேடு உள்பட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. 2-வது நாளான நேற்று எடப்பாடி, பூலாம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் விடிய விடிய கனமழை பெய்தது.
இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது.
பூலாம்பட்டி பகுதியில் பெய்த கன மழையால் சித்தனூர் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த பல ஏக்கர் கரும்பு பயிர்கள் சரிந்து நாசமானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். எடப்பாடி-பூலாம்பட்டி சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் இன்று காலையும் வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன.
எடப்பாடி உழவர் சந்தையின் முகப்பு வாசலில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள், வாகனங்கள் செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டது.