செய்திகள்

கருணாஸ் எம்.எல்.ஏ.வுக்கு அக்டோபர் 4ம் தேதி வரை நீதிமன்ற காவல்

Published On 2018-09-27 10:51 GMT   |   Update On 2018-09-27 10:51 GMT
அவதூறாக பேசி கைதாகிய எம்.எல்.ஏ. கருணாஸ் மீது தொடரப்பட்ட கூடுதல் வழக்கு ஒன்றில் அக்டோபர் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Karunas
சென்னை:

முதல்வர் மற்றும் காவல்துறையினரை அவதூறாக பேசிய வழக்கில் எம்.எல்.ஏ கருணாஸ் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், கடந்த 23-ம் தேதி காலை அவரை கைது செய்தனர். 3 மணி நேர விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை அடுத்த மாதம் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் நீதிபதி உத்தரவிட்டார்.

இதனை அடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே, ஐ.பி.எல். போட்டியின் போது ரசிகர்களை தாக்கிய வழக்கு உள்பட மேலும் 2 வழக்குக கருணாஸ் மீது பதியப்பட்டன. அந்த வழக்கு குறித்து இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையில், கூடுதலாக பதியப்பட்ட வழக்குகளில் ஒன்றான கொலை முயற்சி வழக்கில் கருணாசுக்கு நீதிமன்ற காவல் அளிக்க மறுத்த நீதிமன்றம், ஐ.பி.எல். போட்டியில் ரசிகர்களை தாக்கிய விவகாரத்தில் அக்டோபர் மாதம் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. #Karunas
Tags:    

Similar News