செய்திகள்

நடத்தையில் சந்தேகம்- மனைவியை கொலை செய்ய முயன்ற ஆட்டோ டிரைவர் கைது

Published On 2018-09-24 11:15 GMT   |   Update On 2018-09-24 11:15 GMT
கோவை செல்வபுரம் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரை கொலை செய்ய முயன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை:

கோவை செல்வபுரம் அருகே உள்ள சொக்கம்புதூரை சேர்ந்தவர் சேகர் (வயது 28). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சுகன்யா (24). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் சேகருக்கு அவரது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனவேதனை அடைந்த சுகன்யா கணவரை பிரிந்து கடந்த 10 நாட்களாக பக்கத்து தெருவில் உள்ள தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று சேகர் தனது குழந்தைகளை பார்ப்பதற்காக சுகன்யாவின் தாய் வீட்டுக்கு சென்றார். அப்போது சுகன்யா உறவினர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தார்.

இதனை பார்த்து ஆத்திரம் அடைந்த சேகர் அங்கு இருந்த எல்.இ.டி. டி.வி.யை எடுத்து சுகன்யாவின் தலையில் அடித்தார். பின்னர் தரதரவென வெளியே இழுத்து சென்று அங்கு கிடந்த கல்லால் 2 கால்களில் தாக்கினார். பின்னர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.

தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய சுகன்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது குறித்து செல்வபுரம் போலீசார் மனைவியை தாக்கிய சேகர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews
Tags:    

Similar News