செய்திகள்

லாஸ்பேட்டையில் மாமியாரை தாக்கி கொலை மிரட்டல்- மருமகன் கைது

Published On 2018-09-21 09:59 GMT   |   Update On 2018-09-21 09:59 GMT
வங்கியில் கடன் வாங்கிய தகராறில் மாமியாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மருமகன் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி:

லாஸ்பேட்டை திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி சுமதி. இவர் பாப்ஸ்கோவில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுடைய மகள் தேவி. தேவிக்கும் லாஸ்பேட்டை அசோக்நகர் பாரதி தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் (31) என்பவருக்கு திருமணம் நடந்தது.

பன்னீர் செல்வம் பிளாஸ்டிக் கதவு செய்யும் கடை வைத்துள்ளார். கடைக்கு ஒருவங்கியில் இருந்து கடன் வாங்கி உள்ளார். இதற்கு அவரது மாமியார் சுமதி சாட்சியாக கையெழுத்து போட்டுள்ளார். ஒரு சில மாதங்களில் கடையையும் மூடிவிட்டு, வாங்கிய கடனையும் கட்டாமல் பன்னீர் செல்வம் நிறுத்தி விட்டார்.

மேலும் பணம் கட்டாததாலும், கடையை மூடிவிட்டதாலும் வங்கியில் இருந்து மாமியார் சுமதியிடம் சென்று பணம் கட்டுமாறு கூறினர். அதற்கு மாமியார், மருமகன் பன்னீர் செல்வத்தின் செல்போன் எண்களை கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பன்னீர்செல்வம் மாமியார் சுமதி வேலைபார்க்கும் பாப்ஸ்கோ கடைக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மருமகன் பன்னீர் செல்வம் மாமியார் சுமதியை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதில் காயம் அடைந்த சுமதி புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதுகுறித்து சுமதி லாஸ்பேட்டை புறக்காவல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் வழக்குபதிவு செய்து பன்னீர்செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News