திருவாரூர் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
திருவாரூர்:
திருவாரூர் அருகே விளமல் பதஞ்சலி மனோகரன் தெருவை சேர்ந்தவர் முரளிதரன் (வயது 25). இவர் அதே பகுதியை சேர்ந்த சிவஞானராணி (21) என்ற இளம்பெண்ணை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது சிவஞானராணி 2 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 8-ந்தேதி கணவன்-மனைவி இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது சிவஞானராணி, முரளிதரனை கண்டித்து பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த முரளிதரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டார். அந்த சமயத்தில் அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து முரளிதரனை மீட்டனர். பின்னர் அவர் திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முரளிதரன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து முரளிதரனின் தந்தை ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் திருவாரூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிரேகா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.