செய்திகள்
பொள்ளாச்சியில் தொழிலாளியை கத்திரிக்கோலால் குத்தி கொன்ற வாலிபர் கைது
பொள்ளாச்சி அருகே முன்விரோதத்தில் துப்புரவு தொழிலாளியை குத்தி கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே உள்ள சீலக்காம்பட்டியை சேர்ந்தவர் சரவணக்குமார் (38). துப்புரவு தொழிலாளி. இவரது உறவினர் முருகன் (26). இருவரது வீடுகளும் அருகருகே உள்ளது. இதனால் அடிக்கடி இடத்தகராறு இருந்து வந்தது.நேற்று மாலை இருவருக்கும் மீண்டும் தகராறு உருவானது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன், சரவணக்குமாரின் மார்பில் கத்திரிக்கோலால் குத்தினார்.
இதில் பலத்த காயம் அடைந்த சரவணக்குமார் சம்பவ இடத்திலே உயிர் இழந்தார்.
இது குறித்து கோமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.