செய்திகள்

வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்த ஜெயில் ஏட்டு

Published On 2018-09-17 11:20 GMT   |   Update On 2018-09-17 11:20 GMT
கோவையில் வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்வதாக ஜெயில் ஏட்டு மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை காந்திபுரத்தை சேர்ந்தவர் பூபதி(வயது 38). இவர் குன்னூர் கிளை சிறையில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுதா(34).

இவர் கோவை அனைத்து மகளிர் மத்திய போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

எனக்கும், பூபதிக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது வரதட்சணையாக 11 பவுன் நகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை எனது பெற்றோர் கொடுத்தனர்.

எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. எனது கணவர் கூடுதல் வரதட்சணை கேட்டு என்னை கொடுமைப்படுத்தினார். இதனால் நாங்கள் பிரிந்து வாழ்ந்தோம். வரதட்சணை கொடுமை தொடர்பாக நான் போலீசில் புகார் செய்தேன். இந்த வழக்கில் கோர்ட்டில் எங்களுக்கு கவுன்சிலிங் அளித்தனர். அதன்பின்னர் நானும், எனது கணவரும் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வந்தோம்.

இந்நிலையில் நான் இரண்டாவது கர்ப்பம் அடைந்துள்ளேன். தற்போது எனது கணவர் மீண்டும் என்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துகிறார்.

மேலும் கர்ப்பத்தை கலைக்கச் சொல்லி என்னை தாக்கி சித்ரவதை செய்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

புகாரின்பேரில் பூபதி மீது வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்தல், தாக்குதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
Tags:    

Similar News