செய்திகள்
தருமபுரி மாவட்டத்தில் விநாயகர் சிலை வைக்க 780 இடங்களில் அனுமதி
தருமபுரி மாவட்டத்தில் நாளை விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. 780 இடங்களில் பந்தல் அமைத்து சிலைகளை அமைக்க போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டத்தில் நாளை (13-ந் தேதி) விநாயகர் சதுர்த்தி வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை அமைக்க ஆங்காங்கே உள்ள போலீஸ் நிலையங்களில் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தனர்.
விண்ணப்பங்களை பரிசீலனை செய்த போலீசார் மாவட்டம் முழுவதும் மொத்தம் 780 இடங்களில் பந்தல் அமைத்து விநாயகர் சிலைகளை அமைக்க அனுமதி வழங்கி உள்ளனர். தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளான ஒகேனக்கல், இருமத்தூர், நாகாவதி அணை, அனுமந்தீர்த்தம், தொப்பையாறு, கே.ஆர்.பி. அணை ஆகிய நீர் நிலை பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி வேறு அசம்பாவவிதங்கள் நடைபெறாமல் இருக்க தருமபுரி மாவட்டத்தில் மிகவும் பதட்டமான பகுதிகளான 20 இடங்களில் அடிக்கடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உத்தர விடப்பட்டு உள்ளது. பாலக்கோடு மற்றும் மாரண்டஅள்ளி ஆகிய பகுதிகளில் தனியார் அமைப்புகள் சார்பில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகமாக போடப்பட்டு உள்ளது.