செய்திகள்

ஒட்டன்சத்திரம் அருகே கந்துவட்டி கொடுமைக்கு உயிரை மாய்த்த விவசாயி

Published On 2018-09-08 11:39 GMT   |   Update On 2018-09-08 11:39 GMT
ஒட்டன்சத்திரம் அருகே கந்துவட்டி கொடுமையால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் அருகே பொன்னகரத்தை சேர்ந்தவர் காளிமுத்து(வயது54) விவசாயி. இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாய தேவைக்காக உறவினர் கருப்பசாமியிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கினார். அதற்காக புரோநோட் உள்ளிட்ட ஆவணங்களில் கையெழுத்திட்டு கொடுத்துள்ளார்.

கடனுக்காக மாதந்தோறும் வட்டி செலுத்தி வந்தார். இந்நிலையில் ரூ.50 ஆயிரத்தை திருப்பி செலுத்த கருப்பசாமியிடம் சென்றுள்ளார். அப்போது அவர் உங்கள் கடனுக்கு வட்டி மற்றும் அசலுடன் சேர்த்து சொத்துக்கள் அனைத்தையும் எனக்கு எழுதி கொடுத்துள்ளீர்கள் என கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த காளிமுத்து தனது சொத்தை திருப்பித்தருமாறு கேட்டுள்ளார். இருந்தபோதும் கருப்பசாமி நீங்கள் கையெழுத்து போட்டுக்கொடுத்த பத்திரம் என்னிடம் உள்ளது. எனவே சொத்துக்கள் அனைத்தும் எனக்கே சொந்தம் என தெரிவித்துள்ளார்.

இதனால் என்னசெய்வது என தெரியாமல் மனஉளைச்சலில் இருந்த காளிமுத்து தென்னை மரத்திற்கு வைக்கப்படும் மாத்திரையை சாப்பிட்டு மயங்கினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு காளிமுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஒட்டன் சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து தலை மறைவான கருப்பசாமியை தேடி வருகின்றனர். கந்துவட்டி கொடுமையால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Tags:    

Similar News