செய்திகள்

டீசல் விலை உயர்வு எதிரொலி - கடலுக்கு மீன்பிடிக்க செல்ல ஆர்வம் காட்டாத மீனவர்கள்

Published On 2018-09-08 04:50 GMT   |   Update On 2018-09-08 04:50 GMT
டீசல் விலை உயர்வால் ராமேசுவரத்தில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மீனவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்தது.
ராமேசுவரம்:

பெட்ரோல், டீசல் விலை உயர்வு பலதரப்பினரை பாதித்துள்ளது. கடந்த மாதம் 75 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் இன்று 83 ரூபாயை எட்டியுள்ளது.

முன்பெல்லாம் பெட்ரோலுக்கும், டீசலுக்கும் குறைந்தது 10 ரூபாய் வித்தியாசம் இருக்கும். ஆனால் தற்போது பெட்ரோல் விலைக்கு நிகராக டீசல் விலையும் உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வு மீனவர்களையும் கடுமையாக பாதித்துள்ளது. கடந்த 4 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் நேற்று வாபஸ் பெற்றனர். வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தும் மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆர்வம் காட்டவில்லை.

ராமேசுவரத்தில் 750-க்கும் மேற்பட்ட டீசல் விசைப்படகுகள் உள்ளன. ஒருமுறை கடலுக்கு செல்ல சிறிய அளவிலான விசைப் படகுக்கு ரூ.16 ஆயிரமும், பெரிய அளவிலான விசைப் படகுக்கு ரூ.40 ஆயிரம் வரை டீசல் செலவாகும்.

ஆனால் தற்போது விலை ஏற்றம் காரணமாக மீனவர்களால் அதனை சமாளிக்க முடியவில்லை. இதனால் பலர் நாட்டு படகுகளில் மீன்பிடிக்க செல்கின்றனர்.

இன்று காலை கடலுக்கு செல்ல 450 விசைப் படகுகளுக்கு மீன்வளத்துறை அனுமதி டோக்கன் வழங்கியது.

அதில் 100 முதல் 150 பெரிய அளவிலான விசைப்படகுகள் மட்டுமே கடலுக்கு மீன்பிடிக்க சென்றது. அனுமதி டோக்கன் பெற்ற மற்றவர்கள் கடலுக்கு செல்ல ஆர்வம் காட்டவில்லை.

நாளுக்கு நாள் டீசல் விலை உயர்ந்து வருவதால் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம். டீசல் போட்டு சென்றாலும் அதற்கேற்ற மீன்வரத்து கிடைக்குமா? என்பது சந்தேகம்தான். இதனால் தற்போது நாட்டு படகிலேயே மீன்பிடிக்க செல்கிறோம்.

பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தங்களது இஷ்டத்துக்கு உயர்த்தி வருகிறது. இதற்கு கடிவாளம் போட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News