திருவாரூர் மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் புதுக்குடி, சேங்காலிபுரம்,வடவேர் ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் நிர்மல்ராஜ் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
குடவாசல் வட்டம் புதுக்குடி கிராமத்திற்குட்பட்ட நரசிங்கம்பேட்டை பகுதிகளில் தெருவிளக்குகள், குடிநீர் உள்ளிட்டவைகள் பொதுமக்களுக்கு முறையாக கிடைக்கிறதா என்பது குறித்து மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்களிடம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், தினசரி குடிநீர் விநியோகம், குப்பை அகற்றுவது குறித்து கேட்டறிந்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து சேங்காலிபுரம் ஊராட்சி அக்ரகாரம் பகுதியில் பொதுமக்களிடம் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து தெருவிளக்குகள், தினசரி குடிநீர் விநியோகம் தடையின்றி வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து அரசு உயர்நிலைப்பள்ளியில் மதிய உணவினை கலெக்டர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தன கோபால கிருஷ்ணன், பொற்செல்வி, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.