செய்திகள்

முதல்வர் மீதான புகார் - லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க செப்.12 வரை அவகாசம் அளித்தது ஐகோர்ட்

Published On 2018-09-07 06:09 GMT   |   Update On 2018-09-07 06:09 GMT
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு தொடர்பாக பதில் அளிக்க செப்டம்பர் 12-ம் தேதி வரை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. #EdappadiPalaniswami #RSBharathi #DMK
சென்னை:

தமிழகத்தில் நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளில் ரூ.4,800 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், இதில் முதல்வருக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறி திமுக குற்றம்சாட்டியது. முதலமைச்சரின் உறவினர்களுக்கு சட்ட விரோதமாக டெண்டர் வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக அளித்த புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்காததால், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.



இவ்வழக்கு விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் இதுவரை நடைபெற்ற விசாரணை குறித்த வரைவு அறிக்கையை ஊழல் தடுப்புப்  பிரிவு இயக்குனருக்கு அனுப்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அவருடைய ஒப்புதலுக்கு பிறகு உயர்நீதிமன்றத்தில் அந்த அறிக்கையை தாக்கல் செய்வதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல்வருக்கு எதிரான வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்வதற்கு செப்டம்பர் 12-ம் தேதி வரை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அவகாசம் அளித்த நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார். #EdappadiPalaniswami #RSBharathi #DMK

Tags:    

Similar News