செய்திகள்

பரமத்திவேலூரில் அடுத்தடுத்த விபத்துக்களில் 2 பேர் பலி

Published On 2018-09-06 11:58 GMT   |   Update On 2018-09-06 11:58 GMT
பரமத்திவேலூரில் அடுத்தடுத்து நடந்த சாலை விபத்துக்களில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா சோளசிராமணி செட்டியார் தெருவை சேர்ந்தவர் தங்கவேல்(60). இவரின் மகன் ஐயப்பன்(24). இருவரும் இன்று காலையில் பைக்கில் திருச்செங்கோடு - ஜேடர்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை தங்கவேல் ஓட்டிச்சென்றார்.

அப்போது எதிரே வந்த லாரி நிலை தடுமாறி இவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் தங்கவேல் மட்டும் மேல் சிகிச்சைகாக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படார். ஆனால் சிகிச்சை பலனின்றி தங்கவேல் உயிரிழந்தார்.

இது குறித்து ஜேடர் பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமையில் போலீசார் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

அதேபோல் பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (64). பாண்டமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் மேலாளராக உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு பாண்டமங்கலம்-வேலூரில் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது பைக்குக்கு பெட்ரோல் போட்டு ரோட்டை கடக்க முயன்றார்.

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி நிற்காமல் சென்றது. இதில் இவர் பலத்த காயம் அடைந்தார். இவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் செல்வராஜ் இறந்தார்.

இது குறித்து பரமத்தி வேலூர் இன்ஸ்பெக்டர் லட்சுமணகுமார் வழக்குபதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனம் பற்றி விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News