செய்திகள்

தஞ்சையில் இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுப்பெண் திடீர் மாயம்

Published On 2018-09-06 10:22 GMT   |   Update On 2018-09-06 10:22 GMT
தஞ்சையில் இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுப்பெண் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்:

தஞ்சை மானோஜிப்பட்டி அருள்பிரகாஷ் நகரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி பிரேமலதா. இவர்களது மகள் ராகப்பிரியா (வயது 25). இவர் எம்.எஸ்சி, எம்.பில் படித்துள்ளார்.

இந்த நிலையில் ராகப்பிரியாவுக்கும், தஞ்சை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமணம் பேசி நிச்சயத்தார்த்தம் செய்யப்பட்டு இருந்தது. இவர்களது திருமணம் இன்று தஞ்சையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்தது.

இதனால் இருவீட்டார் குடும்பத்தினரும் திருமண ஏற்பாடுகளை தடபுடலாக செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று புதுப்பெண் ராகப்பிரியா, தனது தாய் பிரேமலதாவிடம் வெளியே சென்று விட்டு வருவதாக கூறி விட்டு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் பிரேமலதா, மகளை பல இடங்களில் தேடி பார்த்தார். எந்த தகவலும் இல்லாததால் , தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மணமகள் ராகப்பிரியா, திருமணத்தில் விருப்பம் இல்லாமல் மாயமாகி விட்டாரா? அல்லது காதல் விவகாரத்தில் சென்று விட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மணமகள் திடீரென மாயமாகி விட்டதால் இன்று நடக்க இருந்த திருமணம் நின்றுபோனது. இதனால் இருவீட்டார் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News