செய்திகள்

திருக்குவளை அருகே தீயில் எரிந்து கூரை வீடு சாம்பல் - ரூ.1½ லட்சம் பொருட்கள் நாசம்

Published On 2018-09-04 15:54 GMT   |   Update On 2018-09-04 15:54 GMT
திருக்குவளை அருகே கூரை வீடு தீப்பிடித்து எரிந்து ரூ.1½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன. இதில் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது
வேளாங்கண்ணி:

நாகை மாவட்டம் திருக்குவளை அருகே மடப்புரம், தெற்கு தெருவை சேர்ந்தவர் குணாளன் (வயது 40). விவசாயி. இவர் கூரை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று குணாளன் மற்றும் அவருடைய மனைவியும் வேலைக்கு சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் குணாளன் கூரை வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது அந்த பகுதியில் வசிப்பவர்கள் வேலைக்கு சென்று இருந்ததால் வீடு தீப்பிடித்து எரிந்தது தெரியவில்லை. இதனால் தீ வீடு முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. மேலும், வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து அருகில் உள்ள வயலில் விழுந்தது.

இந்த தீவிபத்தில் வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தன. இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து திருக்குவளை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு வந்து தீவிபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு அரசின் நிவாரண உதவியை வழங்கினர். 
Tags:    

Similar News