செய்திகள்

தனியார் தொழிற்சாலையில் எந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி

Published On 2018-08-28 16:04 GMT   |   Update On 2018-08-28 16:04 GMT
திருப்போரூர் அருகே, தனியார் தொழிற்சாலையில் எந்திரத்தில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
திருப்போரூர்:

மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்(வயது 19). இவர், காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த காலவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் கடந்த 6 மாதங்களாக எந்திரம் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் சந்தோஷ், தொழிற்சாலையில் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எந்திரம் பழுதாகி நின்றதால், அதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது எதிர்பாராதவிதமாக எந்திரம் இயங்கியதால், அதை பழுதுபார்த்து கொண்டிருந்த தொழிாளி சந்தோஷ், எந்திரத்தில் சிக்கிக்கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி திருப்போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், எந்திரத்தில் சிக்கி பலியான தொழிலாளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News