செய்திகள்

அரசு பஸ்சில் கடத்திய ரூ.50 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

Published On 2018-08-28 15:33 IST   |   Update On 2018-08-28 15:33:00 IST
வேலூர் மாவட்டத்தில் அரசு பஸ்சில் கடத்திய ரூ.50 புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் அரசு பஸ்சில் புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வெங்கடேசனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதிகாரிகள் நேற்று இரவு வேலூர் புதிய பஸ் நிலையம் வந்தனர். ஆனால் அதற்குள் பஸ் கிளம்பிவிட்டது. இதையடுத்து அதிகாரிகள் பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து போலீசார் பாகாயம் பகுதியில் வந்து கொண்டிருந்த நாகப்பட்டினம் செல்லும் அந்த அரசு பஸ்சை மடக்கினர். அதில் ஏறி சோதனை செய்தபோது அதில் 3 மூட்டைகளில் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதை போலீசார் பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து பஸ் நாகப்பட்டினம் நோக்கி புறப்பட்டு சென்றது. பின்னர் போலீசார் புகையிலை பொருட்களை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews
Tags:    

Similar News