செய்திகள்

வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி பி.எஸ்.என்.எல். ஊழியர் பலி

Published On 2018-08-21 17:26 GMT   |   Update On 2018-08-21 17:26 GMT
வேலூர் அருகே வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி பி.எஸ்.என்.எல். ஊழியர் பலியானார்.
பனப்பாக்கம்:

காஞ்சீபுரம் மாவட்டம், பாலுசெட்டிசத்திரம் அருகே உள்ள திருப்புட்குழி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேலு (வயது 53). இவர் வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் லைன்மேனாக வேலை செய்து வந்தார். நேற்று மாலை ஓச்சேரி செல்லும் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள ஒரு வீட்டின் மாடியில் பழுது ஏற்பட்டு இருந்த தொலைபேசி தொடர்பை சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே விழுந்தார்.

இந்த சம்பவத்தை அருகே உள்ள பள்ளி வகுப்பறையில் இருந்த மாணவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக இதுகுறித்து வகுப்பில் பாடம் நடத்தி கொண்டிருந்த ஆசிரியரிடம் கூறினர். பின்னர் ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் விரைந்து சென்று பார்த்தபோது வடிவேலு தொலை தொடர்பு பழுது பார்க்கும் கருவியை கையில் வைத்தபடியே மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் நெமிலி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த நெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி இறந்த வடிவேலுக்கு ஷியாமளா என்ற மனைவியும், தரணி, பொற்கொடி, ஜெயக்கொடி, வேண்டா என்ற மகள்களும் உள்ளனர். 
Tags:    

Similar News