இந்தியா

ஆக்சிஜன் சிலிண்டரை சுமந்தபடி மனைவியை கோவிலுக்கு அழைத்து சென்ற விவசாயி- பக்தர்களை நெகிழ வைத்த தம்பதி

Published On 2026-02-06 07:46 IST   |   Update On 2026-02-06 07:46:00 IST
  • கடந்த 15 ஆண்டுகளாக மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி மாயக்கா தேவி கோவிலுக்கு தொடர்ந்து வந்து சாமி தரிசனம் செய்து வந்தனர்.
  • மனைவி சுவாசிக்க உதவியாக ஆக்சிஜன் சிலிண்டரை, மனைவி செல்லும் இடத்துக்கு எல்லாம் அந்த விவசாயி தூக்கிச்சென்றார்.

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ராய்பாக் தாலுகா சிஞ்சோலி கிரா மத்தில் பிரசித்திபெற்ற மாயக்கா தேவி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் திருவிழா தற்போது நடந்து வருகிறது.

கடந்த 15 ஆண்டுகளாக மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி மாயக்கா தேவி கோவிலுக்கு தொடர்ந்து வந்து சாமி தரிசனம் செய்து வந்தனர். இந்தாண்டு மராட்டியத்தை சேர்ந்தவரின் மனைவிக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சுவாசக்கோளாறு பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் தனது வீட்டில் வைத்து செயற்கை சுவாசம் பெற்று வந்தார்.

இந்தநிலையில் அவர் இந்தாண்டு மாயக்கா தேவி அம்மனை தரிசிக்க முடியாதோ என கணவரிடம் கவலையுடன் சொல்லி வந்துள்ளார். இது பற்றி அவர் டாக்டர்களிடம் கூறினார். அவர்களும் சில ஆலோசனைகளைச் சொல்லி அனுப்பி வைத்துள்ளனர். அதன்படி ஆக்சிஜன் சிலிண்டருடன் மனைவியை அழைத்து கொண்டு சாமி தரிசனம் செய்ய அந்த விவசாயி பெலகாவிக்கு வந்தார்.

பின்னர் மாயக்கா தேவி கோவிலுக்கு சென்று தம்பதி இருவரும் சாமி தரிசனம் செய்துள்ளனர். மனைவி சுவாசிக்க உதவியாக ஆக்சிஜன் சிலிண்டரை, மனைவி செல்லும் இடத்துக்கு எல்லாம் அந்த விவசாயி தூக்கிச்சென்றார். இதனை பார்த்த பக்தர்களும், அங்கிருந்தவர்களும் நெகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் இதனை அங்கிருந்தவர்களில் சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பலரின் 'லைக்குகளை அள்ளி வருகிறது. முதுமையிலும் கரம்பிடித்தவளின் ஆசையை நிறைவேற்றுவதே கடமை, அது ஒரு தனி சுகம் சிலிண்டரை சுமந்து வந்த அவரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Tags:    

Similar News