உலகம்

போலி இந்திய மருந்துகளை விற்ற 200 இணையதளங்கள் அமெரிக்காவில் முடக்கம்

Published On 2026-02-06 07:57 IST   |   Update On 2026-02-06 07:57:00 IST
  • அமெரிக்காவில் பல்வேறு இணையதளங்கள் மூலமாக போலியான இந்திய மருந்துகள் சட்டவிரோதமாக விற்கப்படுவது குறித்து புகார்கள் எழுந்தன.
  • இணையதளங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்ட பல மாத்திரைகளில் உயிருக்கு ஆபத்தான பொருட்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் மற்றும் இந்திய நிறுவனங்களால் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் இந்திய மருந்துகளுக்கு அமெரிக்காவில் எப்போதும் கிராக்கி இருக்கிறது.

அமெரிக்காவில் இந்திய மருந்துகள் அதிக மதிப்பும் தேவையும் பெறுவதற்குக் காரணம் அவற்றின் உயர்தர தரநிலைகள், குறைந்த செலவு. மற்றும் நம்பகமான உற்பத்தித் திறன் ஆகும்.

உலகத் தரச் சான்றிதழ்களுடன் தயாரிக்கப்படும் இந்திய மருந்துகள், தரத்தில் எந்த சமரசமும் இன்றி மலிவான சிகிச்சையை வழங்குகின்றன. இதனால் அமெரிக்காவின் சுகாதார அமைப்பில் இந்திய மருந்துகள் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன.

இந்தநிலையில் அமெரிக்காவில் பல்வேறு இணையதளங்கள் மூலமாக போலியான இந்திய மருந்துகள் சட்டவிரோதமாக விற்கப்படுவது குறித்து புகார்கள் எழுந்தன. மேலும் டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் இந்த மருந்துகளை உட்கொண்ட 10 பேர் உயிரிழந்தது குறித்து அந்த நாட்டின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரித்தது.

இதற்காக இந்தியாவின் அமலாக்கத்துறையிடம் அமெரிக்க புலனாய்வு நிறுவனம் தகவல்கள் பெற்றது. அதன்படி இந்தியாவில் இயங்கி வந்த ஒரு சர்வதேச குற்றவியல் கும்பலுக்கு சொந்தமான 200-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் மூலமாக அமெரிக்காவில் அந்த போலி மருந்துகளை சட்டவிரோதமாக விற்றது தெரிய வந்தது.

இந்த இணையதளங்கள் முறையான டாக்டர் பரிந்துரை சீட்டு இன்றி, போலியான மற்றும் தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்து வந்துள்ளன. இந்த இணையதளங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்ட பல மாத்திரைகளில் உயிருக்கு ஆபத்தான பொருட்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து போலி இந்திய மருந்துகளை விற்ற 200 இணையதளங்கள் அமெரிக்காவில் முடக்கப்பட்டன. நியூயார்க்கில் இருந்த இந்தியர்கள் உள்பட 4 பேர் இதுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News